Skip to main content

“ஜாதிப் பெயரைவிட படிப்பின் பெயரை போட்டுக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Minister Meyyanathan says he is proud to say the name of the education rather than the caste

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்காக குழு அமைத்து கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி வகுப்பறைகளை சீரமைத்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அந்தப் பள்ளியின்  செயல்பாடுகளைப் பாராட்டியதோடு முன்னாள் மாணவர்கள் அந்தப் பள்ளி வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் அதிகம் உள்ளனர். அதேபோல கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதமும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடும் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் மேம்பாடு அடையும்போது அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். எந்த ஒரு சூழலிலும் கல்வியை கற்றால் எதையும் சாதிக்கலாம்.

ad

ஒரு காலத்தில் தமிழகத்தில் நாம் பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் பயன்படுத்தினோம். இப்போது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் நீக்கப்பட்டு படித்த படிப்பின் பட்டங்களை பயன்படுத்துகிறோம். இந்த மாற்றத்திற்கு நாம் கற்ற கல்வி தான் காரணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். அதனால் அதிகமானோர் கல்வி கற்க காரணம். எப்போதும் அப்படிப்பட்ட கல்வியை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் சூழலில் மெய்யநாதன் என்ற பெயருக்கு பின்னால் இடம் பெற்றுள்ள MCA என்ற படித்த பட்டம் தான் உலக அளவில் எனக்கு பெயரையும், மதிப்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது. அதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் மாணவர்களும் கல்வி கற்பதில் அதிக ஆர்வமுடன் செயல்பட்டு பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பட்டங்களை போடுவதை பெருமையாக கருத வேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.