![Minister CV Shanmugam report](http://image.nakkheeran.in/cdn/farfuture/gzZBmnngbAUMtscSg7Ys7qnf5usflThG623sQPNmN6s/1593614995/sites/default/files/inline-images/cbcbcbc.jpg)
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தற்போது வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது அரசின் நிலைப்பாடு. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது. அப்பாவி இருவரது இறப்பை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு சூழ்ச்சி செய்வதாக தோன்றுகிறது.
வழக்கின் போக்கை குலைக்க, அரசியலாக்க திமுக சதி செய்கிறது. அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலினின் செயல்பாடுகளில் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.