Skip to main content

தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2018 | Edited on 25/04/2018
high


தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மெரினாவில் அரசின் அனுமதியுடன் கடைசியாக எப்போது போராட்டம் நடந்தது என அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டிற்கு பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை. அதற்கு முன் பாலகங்காதர திலக்கின் 150வது நினைவு தினத்தையொட்டிய நிகழ்ச்சிக்கு அரசு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்ததாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில், கடந்த 2003-ம் ஆண்டு மெரினாவில் ஜெயலலிதாவின் படங்கள் எரிக்கப்பட்டதால் தான் அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார். மேலும் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் லட்சகணக்காண மக்கள் கோயில், தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர், அந்த கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை என கூறி மக்கள் அந்த பண்டிக்கைகளை கொண்டாடக் கூடாது என கூற முடியுமா எனவும் கேட்டார்.

மேலும், போராட்டங்களை ஒழங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி குப்பம் கடற்கரையில் போராட்டம் நடத்த முடியுமா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வழங்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

“மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்” - டி.கே.சிவக்குமார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 D.K.Sivakumar says All arrangements are ready for construction of Mekeadatu Da

தமிழகத்திற்கும், கர்நாடாகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. நேற்று (14-12-23) மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜ.க உறுப்பினர் என்.ரவிக்குமார், மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும். 

நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது.

அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால், நமக்கும் நெருக்கடியான நிலை வராது. கர்நாடகாவில் இந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பயிர்களை பாதுகாக்கவும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் பின்பற்றினோம். மேகதாது திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கீழ்மட்டத்திலேயே பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, கர்நாடகா அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல கர்நாடகா அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.