![mmmhhh](http://image.nakkheeran.in/cdn/farfuture/o6Qy63SvCe9YB6bW3tM4M6-UBgVPh6XPqnA2_rvXy6g/1592935546/sites/default/files/inline-images/630_5.jpg)
தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், மனைவி இறந்த பின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம் கொண்டவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி, மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10ஆயிரம் பணத்தை கடந்த மாதம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.
இப்படி 3 முறை வழங்கிய நிலையில், இன்று மேலும் 4வது முறையாக 10 ஆயிரம் ரூபாயை வசூல் செய்து அதனை கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆண்டு தோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாக கொண்ட பூல்பாண்டியன் தற்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளியோருக்கு உதவும் வகையிலான நிதி வழங்கிவருகிறார்.