
தமிழகத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வந்தார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவை விமர்சனம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தார்கள்.
மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிர பிரச்சார வழிமுறைகளைக் கையாண்டார்கள். தோசை சுடுவதில் தொடங்கி சிறுவர்களைக் குளிப்பாட்டுதல் வரை தங்களால் ஆன அனைத்து வழிகளிலும் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். இந்நிலையில், நேற்று மாலையோடு பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார் எழுந்த இடங்களில் நேற்று விடிய விடிய தீவிர சோதனை நடத்தி வருகிறது. பணம் கொடுப்பதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. சில இடங்களில் வாக்காளர்களுக்குக் கொடுக்க இருந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.