Skip to main content

வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 10/08/2024 | Edited on 10/08/2024
Judgment postponed in Vinesh Phogat olympic case

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்திருந்த தகவலின்படி, ‘மகளிர் மல்யுத்த 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. குழுவினரின் சிறந்த பயிற்சிகள் இருந்தபோதிலும், அவர் 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) கூடுதல் எடையுடன் இருந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,  மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ் போகத் இனி என்னிடம் போராடச் சக்தியில்லை என்று மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும்,  தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்த வழக்கு நேற்று(9.8.2024) மாலை நீதிபதி அனபெல் பெனட் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று(10.8.2024) தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளைக்கு(11.8.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரீஸ் நேரப்படி நாளை மாலை 6 மணிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்