
கோவை ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்துவ மதபோதகரான இவர் பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார். குறிப்பாக கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமாகி இருந்தார். ஜெபராஜ், எட்வின் ரூஸோ என்பருடன் இணைந்து கோவை கிராஸ்கட் சாலையில் 'கிங் ஜெனரேஷன்' என்ற பிரார்த்தனை கூடத்தை நடத்தி வந்தார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இதனால் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் சிறுமிகளை முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. தொடர்ந்து ஜான் ஜெபராஜ் மீது இரண்டு போக்ஸோ வழக்கு பாய்ந்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின் பொழுது அதில் கலந்துகொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை அவர் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என போலீசார் சந்தேகிப்பதால் கோவை காவல்துறை சார்பில் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.