!['Jackpot!' for property tax payers by April 30; Corporation announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ybBou75Gf9k0oV6WcTrlZ11opmPNUmG7RqmVP-4dKco/1681970340/sites/default/files/inline-images/th_3952.jpg)
நடப்பு ஏப். 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84ன் படி, சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய 2023-2024ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப். 30ம் தேதிக்குள் செலுத்தும், சொத்து உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது 5000 ரூபாய் வரை பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியை, வரி வசூலிப்பாளர்களிடம் நேரடியாகவோ அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் மூலமாகவோ செலுத்தலாம்.
கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் சொத்து வரி செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சேலம் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியை ஏப். 30ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது 5000 ரூபாய் வரை பெற்று பயன் பெறுமாறு சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.