![Husband and wife arrested in theft case! Police who acted quickly](http://image.nakkheeran.in/cdn/farfuture/ceoLqqnr554vsZKTSRlKuqrJW-3an0mmua6yrgHkEUs/1626847881/sites/default/files/inline-images/kovai-hus-wife.jpg)
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பரமேஸ்வரி என்பவரது வீட்டில் 18 சவரன் தங்க நகை திருடப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை திருடப்பட்டது தொடர்பாக சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். இந்நிலையில், அந்த வீட்டில் பதிந்த கைரேகைகளைப் பதிவுசெய்த போலீசார், அதன் அடிப்படையில் விசாரணை செய்தனர்.
பதிவு செய்யப்பட்ட கைரேகைகளை, பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஆய்வுசெய்தனர். அப்போது, கோவை வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ராமு என்பவரது கைரேகையுடன் ஒத்துப்போனது. சமீபத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்த ராமு, தனது மனைவி இந்துராணியுடன் பல்லடம் அருகே வசித்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வீட்டில் பதிவான கைரேகை அடிப்படையில், சுல்தான் பேட்டை போலீசார் பல்லடம் வீட்டிலிருந்த ராமு மற்றும் அவரது மனைவி இந்துராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 13 சவரன் தங்க நகை மற்றும் 52 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில், கணவன் - மனைவி இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் கிராமங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கணவன் - மனைவி இருவரையும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.