![Government vehicle - bike head-on collision youth passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/yHU0Nx0SyS4c4moh6nDauIIZZ29O7qrnEDfhVO6AOf4/1654750257/sites/default/files/inline-images/hand-in_213.jpg)
திருச்சி புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் மகன் வினோத்(23). திருச்சி சமயபுரம் அருகே உள்ள பொறியல் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகிறார். இதே கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும், வினோத்தும் நேற்று மாலை வினோத்தின் இருசக்கர வாகனத்தில் திருச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
லால்குடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளரின் அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கல்லூரி மாணவர் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த கல்லூரி மாணவி, தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம் வந்த கீரனூர் போலீசார் மாணவர் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.