கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து, அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர காவல் ஆணையருக்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில், சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும், பல்வேறு தகவல்களை வெளியிட்ட எனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவசரகதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்டப்படியும், இயற்கை நீதிக்கும் முரணானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு, மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.