Skip to main content

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை! – உயர் நீதிமன்றத்தில் கல்வித்துறை தகவல்!

Published on 25/08/2020 | Edited on 26/08/2020

 

The government has not taken any decision regarding the opening of schools and colleges! - Academic Information in the High Court!

 

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் அரசு எடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவல் காரணமாக, மார்ச் மாத இறுதியில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஆனால்,  பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்ககோரி, கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், "11 -ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24 -இல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல்,   பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும்.

 

தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளிவைக்க வேண்டும்.  தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்நிலை வகுப்புகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளன என்பது குறித்து அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

 

http://onelink.to/nknapp


வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக, அரசு இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. தனித்தேர்வைப் பொருத்தவரை,  நடத்தி முடிக்கப்பட்ட இரண்டு வாரத்தில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்