
சிதம்பரம் அருகே உரக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வாண்டையாம்பள்ளத்தை சேர்ந்தவர் கணேஷ். சிதம்பரம் பகுதியில் உரக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 24 ஆம் தேதி மனைவி மற்றும் மகளுக்கு திராட்சை ரசத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துவிட்டு அடுத்தநாள் காலை கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலி பேஸ்ட் சாப்பிட்ட அவரது மனைவி மகள் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கணேஷ் அவருடைய நண்பர் அக்பர் அலி என்பவருக்கு அனுப்பியிருந்த வாட்ஸ்அப் ஆடியோவில், 'என்னுடைய தற்கொலை முடிவுக்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செங்குட்டுவன் உள்ளிட்ட 7 பேர்தான் காரணம்' என தெரிவித்துள்ளார். செங்குட்டுவன் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனுக்கு கணேஷ் ஜாமீன் கையொப்பமிட்டுள்ளார். இந்நிலையில் செங்குட்டுவன் கடனை அடைக்காததால் கணேஷ் கடன் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். இதனால் இந்த தற்கொலை நிகழ்ந்துள்ளது தெரியவர, செங்குட்டுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.