Skip to main content

ரூ.25 ஆயிரம் லஞ்சம்; பெண் துணை தாசில்தார் கைது 

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Female deputy tahsildar arrested in kanyakumari

 

கன்னியாகுமரி மாவட்டம், கண்டன்விளை அருகில் உள்ள மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருடைய சகோதரியின் மகன் ராகுல்(27). இவர் அந்த பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு கண்டன்விளை பகுதியில் சுமார் 7 செண்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தில், தனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வருகிறார். 

 

இந்த நிலையில், அது விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெற முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. இதன் காரணமாக விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றித் தர வருவாய்த் துறையிடம் ராகுல் விண்ணப்பம் செய்திருந்தார். அதனை தொடர்ந்து, ராகுலின் 7 செண்ட் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு செய்து அதன் கோப்புகளை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

ஆனால், இந்த விண்ணப்பம் மனு தொடர்பான விபரத்தை கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி (45) கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ராகுல்  தனது சித்தி ஜெகதீஸ்வரியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஜெகதீஸ்வரி துணை தாசில்தார் ருக்மணியை சந்தித்து விண்ணப்ப மனுவுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அப்போது, விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று ருக்மணி கூறியுள்ளார். அதற்கு, பணத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாக கூறி அங்கிருந்து ஜெகதீஸ்வரி புறப்பட்டுள்ளார். 

 

அதனை தொடர்ந்து, இது பற்றி ஜெகதீஸ்வரி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ரசாயணம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை ஜெகதீஸ்வரியிடம் வழங்கியுள்ளனர். பின்னர், அந்த பணத்தை ருக்மணியிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய அறிவுரையின்படி, ஜெகதீஸ்வரி ருக்மணியிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து ருக்மணி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.