
மகனின் இறப்பு செய்தியைக் கேட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவரான கார்த்திக் ராஜா தனது மனைவியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக ராமநாதபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த தனது தந்தையை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கார்த்திக் ராஜா வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஓட்டப்பாளையம் பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார்த்திக் ராஜா உயிரிழந்த செய்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசனிடம் தெரிவிக்கப்பட்டது. மகனை இழந்த அதிர்ச்சி தாங்காது அவரும் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து இரு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தி கேட்டு தந்தையும் இறந்தது அக்குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.