Skip to main content

சீமான் மீதான பாலியல் வழக்கு; நடிகையிடம் போலீசார் விசாரணை

Published on 26/02/2025 | Edited on 26/02/2025
case against Seeman; Police question actress

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு நடிகை சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376 ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை, 2012 ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சீமான் அளித்த மனு மீதான வழக்கு கடந்த 17-02-2025 அன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் அவர், ‘விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது’ என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அண்மையில் இந்த வழக்கின் தீர்ப்பு விவரம் முழுமையாக வெளியாகி இருந்தது. அதில், 'மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. எனவே தன்னிச்சையாக திரும்பிப் பெறப் முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியிருப்பது சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த பொழுது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. திரைத்துறை தொடர்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது' என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். நாளை (27/02/2025) காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பாக கருதப்படும் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ள போலீசார் இன்று காலை முதல் நேரில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்