![Farmer lost their after consuming poison in front of police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/gC2pIcEjNqTQlYIWE5Qh8uDlOFHEFDr28BUWeVEG5nI/1675953381/sites/default/files/inline-images/n223295.jpg)
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய விவசாயி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலக்குண்டை சேர்ந்தவர் விவசாயி பாண்டி. சிறுமலை அடிவாரப் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை பள்ளப்பட்டியை சேர்ந்த சிலர் அச்சுறுத்தி மிரட்டி பறிக்க முயல்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மகன் சதீஷ் கண்ணன் உடன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக நிலக்கோட்டை நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்வதற்கு ஆணை பிறப்பித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பாண்டி நேற்று முன்தினம் அம்மையநாயக்கனூர் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாத போலீசாரை கண்டித்து கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தி காவல் நிலையம் முன்பு மயங்கி விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி பாண்டி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த நிலையில் பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் கொடுத்தபோது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.