![Erode collector tested positive covid 19](http://image.nakkheeran.in/cdn/farfuture/Em4vEjNNBCkCUpm3i_XWm5WR9mkY1gwm4io5bZFP_xQ/1598016691/sites/default/files/inline-images/xcds.jpg)
ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையாகப் பணி செய்தவர் மாவட்ட ஆட்சியரான சி.கதிரவன். இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியரான கதிரவனுக்கும் கரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் கதிரவன் அவர்களை நாம் தொடர்பு கொண்டபோது "ஆமாம் எனக்கு கரோனா வைரஸ் தொற்று பாசிட்டிவ் என வந்துள்ளது. இது சிம்டம்ஸ் ஏ வகையில் உள்ளது. ஆகவே நான் வீட்டில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன்" என்றார்.
கலெக்டருக்கு வைரஸ் தொற்று உறுதியானது எனத் தகவல் வெளிவந்ததும் பல தரப்பிலும் பீதி ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்தான். இதில் முக்கியமானது 20 -ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கணபதி பாளையத்தில் துணை மின் நிலையம் திறப்புவிழா செய்யப்பட்டது. அதில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு மேற்கு ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தென்னரசு, மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டார். இப்போது 21 -ஆம் தேதி கலெக்டருக்கு வைரஸ் தொற்று என வந்துள்ளது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலரும் தங்களுக்கும் வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, 21 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் நடந்த அரசு விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவரோடு அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டார். ஆக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் தங்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.