![During the District Collector's study in Vriddhachalam, more than a hundred people gathered to file a petition](http://image.nakkheeran.in/cdn/farfuture/wERNvYJB4EEibvKw35ULJ7jtOcMBCOWoR29Zg7TE5mE/1604169691/sites/default/files/inline-images/zxvbxbcbccbcbcbcb.jpg)
கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஓட்டுப்பெட்டி இயந்திரங்கள் விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையைச் சுற்றி கண்காணிப்புக் கேமராவுடன், 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை, பார்வையிட்டுப் பாதுகாப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலம் கஸ்பா காலனியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், "தங்களின் பகுதியில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யும் சுடுகாட்டினை சிலர் ஆக்கிரமித்து, அடக்கம் செய்யவிடாமல் தடுப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி இறந்தவர்களை அடக்கம் செய்ய வழிவகை செய்யுமாறும் கோரிக்கை மனு அளிக்க குவிந்தனர். இதனால், பரப்பரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, கோரிக்கை மனுவினை ஒரு சிலர் மட்டும் சென்று வழங்குமாறு அறிவுறுத்தினர். இதனால், சிலர் மட்டும், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்து, சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.