![Duraimurugan said that I will never forgive traitors who betray party](http://image.nakkheeran.in/cdn/farfuture/1MjhGhJbQBiOx1W13kEEQROPcNeNwZp08oA1B9SCgho/1731749008/sites/default/files/inline-images/12_212.jpg)
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதி, திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில், திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது கட்சியினரிடையே பேசிய அமைச்சர் துரைமுருகன், “காட்பாடியில் கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்து கொண்டுதான் வருகிறேன். போன முறை தேர்தலின் போது கொஞ்சம் ஏமார்ந்து விட்டேன். இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன். சில துரோகங்கள் செய்துவிட்டார்கள். அதுவும் எனக்குத் தெரியும். அந்த துரோகிகளை கலை எடுத்துவிட்டுத் தேர்தலை நடத்தும் ஆற்றல் தனக்கு உண்டு. நான் யாரை வேண்டுமாணாலும் மன்னித்து விடுவேன் ஆனால் கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன்.
என்னையே கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்தை, நான் இருக்கும் இயக்கத்தை 60 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன்” என்று காட்டமாகப் பேசினார்.