Skip to main content

“முதியவரை வாயில் கவ்வியபடி முரண்டு பிடித்த முதலை”... போராடி சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

The crocodile that clashed with the old man in the mouth

 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது பழைய நல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(65). இவர் நேற்று இரவு ஏழு மணி அளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள தண்ணீரில் குளிப்பதற்காக இறங்கி உள்ளார். அப்போது திடீரென தண்ணீரில் கிடந்த முதலை ஒன்று அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. கோபாலகிருஷ்ணன் கத்தி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கழிதடி போன்ற ஆயுதங்களுடன் ஓடிச்சென்று முதலையை அடித்துள்ளனர். ஆனாலும் அந்த முதலை அவரை விடாமல் இழுத்துச் சென்றது. வேளக்குடி பகுதிவரை தண்ணீரில் இழுத்துச் சென்றுள்ளது.

 

அதற்குள் அண்ணாமலை நகர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஊர் மக்களோடும் இணைந்து படகு மூலம் முதியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணி அளவில் ஒரு பகுதியில் முதலை கோபாலகிருஷ்ணனை சடலமாக வாயில் கவ்வியபடி  கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. முதலையிடமிருந்து கோபாலகிருஷ்ணன் சடலத்தை மீட்பதற்கு கடும் முயற்சி செய்தனர். ஆனால் முதலை விடாமல் முரண்டு பிடித்தது. முதலையை அடித்து விரட்டிவிட்டு கோபாலகிருஷ்ணன் உடலை ரத்த காயங்களுடன் சடலமாக மீட்டுள்ளனர். ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் முதலையின் வாயில் அகப்பட்டுக் கடித்துக் குதறப்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பழைய கொள்ளிடம் மற்றும் அதன் உபரி நீர் செல்லும் பகுதிகளில் ஏராளமான முதலைகள் உள்ளன.

 

கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறி அதனால் உயிரிழந்துள்ளனர். பலர் கை, கால் இழந்து காயமடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பனங்காடு என்ற பகுதியில் ஒரே நாளில் இரண்டு பேர் முதலை கடிக்கு ஆளாகி உள்ளனர். தற்போது முதலையின் வாயில் அகப்பட்டு  இறந்துபோன கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது முதலை அவரை இழுத்துச் சென்று கடித்துக் குதறியதால் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலைகள் மனிதர்களை மட்டுமல்ல கொள்ளிடம் கரையோரம் மற்றும் ஆற்றங்கரையோரம், ஓடக்கரை ஓரத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளையும் விட்டு வைக்கவில்லை, அவற்றையும் பிடித்து கடித்துத்  தின்று விடுகிறது.

 

இதில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்கள் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள அகரம் நல்லூர், வேளக்குடி, சிதம்பரம் கஞ்சங்குல்லை என இப்படிப் பல கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வனத் துறையினரிடம் அவ்வப்போது பிடிபடும் முதலைகளைச் சிதம்பரம் அருகே உள்ள பத்திரம் மாதிரி குளத்தில் கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் அந்த குளத்திலிருந்து முதலைகள் எளிதாக வெளியேறி ஆறு வாய்க்கால் பகுதிக்குச் சென்று விடுகின்றன. எனவே பெரிய அளவில் சிதம்பரம் பகுதியில் முதலைப் பண்ணையை உருவாக்கி ஒட்டுமொத்த முதலைகளையும் பிடித்துக் கொண்டு சென்று அதில் விடவேண்டும். முதலைகளின் பிடியிலிருந்து கிராம மக்களை விடுதலை செய்ய வேண்டும். முதலையின் அச்சத்திலிருந்து சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கிராம மக்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.