![Corona situation in Tamil Nadu today!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6pvTf4KcnkIfVoeGFCo7wrw4uVzr0QTW62ppmziqPxk/1628519819/sites/default/files/inline-images/0_48.jpg)
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,928 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,54,702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 182 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 187 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,340 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,427 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,886 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,22,470 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணைநோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவையில்-235, ஈரோடு-178, செங்கல்பட்டு-107, தஞ்சை-95 ,திருவள்ளூர்-88, கடலூர்-87, சேலம்-85, திருப்பூர்-77,திருச்சி-67, நாமக்கல்-50, நீலகிரி-47 பேருக்கு கரோனா இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 27 ஆம் தேதி 169 ஆக இருந்த ஒருநாள் கரோனா பாதிப்பு இன்று 235 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''கரோனா இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை. எனவே தனிமனித இடைவெளியைப் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.