Skip to main content

ஊரடங்கு காலத்தில் 616 குடும்ப வன்முறை புகார்கள்! -உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

corona lockdown Impact - TNGovt Report Highcourt

 

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசு குடும்ப வன்முறையைத் தடுக்க  தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,   சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்  பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதாசுமந்த் அமர்வு  முன்பாக  இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  குடும்ப வன்முறை புகார்கள் தொடர்பாக,  மாவட்டம் தோறும் சமூகநலத்துறை  தினந்தோறும் அறிக்கை பெற்று வருகிறது.  இதுவரை 616 புகார்கள் வந்துள்ளன.   கிராமங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சம்மந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களைத்  தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு, உடனடியாக கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.  சட்ட உதவி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண்கள்,  சமூக நலத்துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

 

 

 
 

சார்ந்த செய்திகள்