
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் நேற்று காலை எருது விடும் திருவிழா தொடங்கியது. இதில் காளைகளை முந்தி சென்று அவிழ்த்து விடுவது தொடர்பாக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தியால் குத்தியதில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மற்றும் நவயோகன் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சதீஷ், குபேந்திரன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் எருது விடும் திருவிழாவிற்காக மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஒவ்வொரு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதிப்பதால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக காளைகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.