இந்தியாவில், 300 கோடி ரூபாய் அளவிலான மோசடியை நடத்தியுள்ளது சீன கந்துவட்டிக் கும்பல் ஒன்று. கந்துவட்டி மோசடியில் கிடைத்த பணத்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வியாபாரத் தளங்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரில் கால் சென்டர் வைத்து, நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் கடன் தருவதாகக் கூறி கந்துவட்டித் தொழிலில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த ஜியோ யமஹோ, ஹுயுவாலுன், பெங்களூருவைச் சேர்ந்த ப்ரோமோத், பவன் உள்ளிட்ட பலரை கடந்த வாரம் சென்னை போலீசார் கைதுசெய்தனர். ஆன்லைனில் கடன் தருவதாகச் சொல்லி விளம்பரப்படுத்தும் செயலிகளை உருவாக்கி கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலீடாகக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த மோசடிக் கும்பல்தான் அத்தனைக்கும் தலைமை. இதில், கைது செய்யப்பட்ட அனைவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சீனர்கள். அவர்கள் இருவரும் போலியாக நிதி நிறுவனம் தொடங்கி அதற்காக 1,600 சிம் கார்டுகளைப் பெற்றுள்ளனர். அதேபோல் கைது செய்யப்பட்ட இரு சீனர்களும் பாஸ்போர்ட் காலாவதியான போதிலும் இந்தியாவில் சட்டத்தை மீறி தங்கியிருந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை இயக்கும் தலைவன் சிங்கப்பூரிலுள்ள ஹாங் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வேறு எங்கெல்லாம் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளது. இவர்களால் என்னென்ன மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ளது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் செலவுசெய்து கால் சென்டர்களை உருவாக்கி, இதுவரை 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், இதில் வரும் லாபத் தொகையை அப்படியே ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றில் சட்ட விரோதமாகக் கைதாகியுள்ள சீனர்கள் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் ஆன்லைனில் கடன்பெறுவது அல்லது மொபைல் ஆப்கள் மூலம் கடன்பெறும் பொழுது உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.