![Child marriage stopped in two places ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/uGTOPFX2SULtBaeJQjnJE5So15GRqEXKtLzqPTGTWn0/1604126084/sites/default/files/inline-images/child-marriage.jpg)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 16 வயது சிறுமிக்கும் செல்வகுமார் என்ற 28 வயது வாலிபருக்கும் இருதரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் பாங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த சமூக நல விரிவாக்க அலுவலர் அம்சவேணி உடனடியாக திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன், ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, உறுப்பினர் சாந்தி ஆகியோருக்கு தகவல் அளித்ததோடு அனைவரும் சென்று அந்த மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அதேபோன்று மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் செஞ்சி அருகில் உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன் என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மைலம் ஒன்றிய சமூக விரிவாக்க அலுவலர் செல்வி மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி அதன் உறுப்பினர் பரிமளா ஆகியோர் உடனடியாக சென்று அந்த சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அவர்களின் பெற்றோர்களை அழைத்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் எனக்கூறி அறிவுறுத்தியுள்ளனர். ஒரேநாளில் இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த சட்டத்திற்குப் புறம்பான திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.