Skip to main content

முதல்வரின் அறிவிப்பு; நன்றி சொன்ன முல்லைப் பெரியாறு விவசாய சங்கங்கள் 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

தென்மாவட்டத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் கட்டி கொடுத்திருக்கிறார்.  

 

இப்படி முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுவிக்கை இந்த ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொது மக்களும் கடவுளாக எண்ணி தங்கள் கடைகளுக்கும் பிள்ளைகளுக்கும் பென்னிகுவிக் பெயரவே தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அதுபோல் பென்னிகுவிக் பிறந்த நாளான டிசம்பர் 16ஆம் தேதி நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை பொங்கல் வைத்து தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடுவது வழக்கம். லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து விழா கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 16ஆம் தேதி பட்டி தொட்டி முதல் மணி மண்டபம் வரை பொது மக்களும், விவசாயிகளும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். 

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

கடந்த அதிமுக ஆட்சியில் பென்னிகுவிக் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் அரசு சார்பில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான முத்துராமலிங்கம் உள்பட விவசாய சங்க நிர்வாகிகளும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சும் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தினார். பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கர்னல் பென்னிகுவிக்குக்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் உள்ள பூங்காவில் சிலை வைக்கப்படும்; அதற்கான பணிகளை இங்கிலாந்திலுள்ள தமிழர்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

இது சம்பந்தமாக ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொன்காட்சிக் கண்ணனிடம் கேட்டபோது, “இங்கிலாந்தில் பிறந்தும்கூட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துதான் முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் எங்களுக்காக கட்டிக் கொடுத்துவிட்டுப்போனார். அந்த நன்றியை உலகம் இருக்கும்வரை தென்மாவட்ட மக்கள் மறக்க மாட்டார்கள். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த கர்னல் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் லோயர் கேம்பில் மணிமண்டபம் கட்டி பென்னிகுவிக் சிலையையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதுபோல் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டிலேயே சிலை வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முல்லைப் பெரியார் அணையை நேரில் சென்று ஆய்வு செய்துவந்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

Chief's announcement; Mullai Periyar farmers

 

நமக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை வருடத்திற்கு ஒரு முறையாவது முதல்வர், அமைச்சர்கள் யாராவது ஒருவர் நேரில் பார்த்து வந்தால்தான் கேரளாக்காரர்களுக்கு பயம் இருக்கும். தற்போது 142 அடியிலிருந்து 152 அடிவரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த காலங்களில் தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று ரசித்து இருக்கிறார்கள். அதுபோல் பள்ளி மாணவ மாணவிகள்கூட முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். நானும் மூன்று முறை மாணவப் பருவத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு போய் வந்திருக்கிறேன். அந்த அளவுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடுவது பயனுள்ளதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளையும் மாணவ மாணவிகளையும் அனுமதிக்காமல் வெறும் போட்டிங் மட்டும் போய்வரும் நிலை தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழக முதல்வரும் கேரளா முதல்வரும் பேசி மீண்டும் முல்லைப் பெரியாறு அணை வரை சுற்றுலா பயணிகள் போய் வர அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.