Skip to main content

“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
happy


“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் நாளை சென்னை தினமாக (Madras Day) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639 ஆகஸ்ட் 22ல் ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு வாழ்வுரிமை அளித்த மண். இத்தகைய பெருமை மிகுந்த சென்னையை தலைநகராக்கினார்கள் ஆங்கிலேயர்கள். 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியிலேயே சென்னையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டு, கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. தியாகராய நகர் என்கிற புதிய பகுதி நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் பகுதியாக சென்னை மீட்கப்பட்டு, தலைநகராக நீடிக்கச் செய்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்பதை “தமிழ்நாடு” என்று மாற்றிப் பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார் , தி.மு.கழகத்தின் முதல் முதல்வரான பேரறிஞர் அண்ணா அவர்கள். தலைநகர் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்து தமிழ்-தமிழர்களின் பெருமையை சென்னை வாயிலாக உலகம் முழுவதும் அறியச் செய்தார் அண்ணா. அண்ணா அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகி அதிக காலமான 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவரான தலைவர் கலைஞர் அவர்கள், சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, “சென்னை” என அனைத்து மொழிகளும் ஏற்றுப் பயன்படுத்திடும் வகையில், பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தார். திராவிட இயக்க வரலாற்றில் சென்னை மாநகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

திராவிடர் சங்கம், நீதிக்கட்சி ஆகியவை தொடங்கப்பட்ட மாநகரம் இது. முதல் இந்தி எதிர்ப்புப் போரில் (1938) சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைப்பட்டு உயிரிழந்தது சென்னையில்தான்! பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலில சிறை கண்டதும் சென்னையில்தான்! திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தை அவர் தொடங்கியதும் இதே சென்னையில்தான். அவர் வழியில் வந்த தலைவர் கலைஞர் அவர்களால் அண்ணா நகர், அண்ணா சதுக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீனமான வளர்ச்சியுடன் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்கள் உருவாக்கப்பட்டன.

தலைவர் கலைஞர் அவர்களால் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெயரினைப் பெறும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்த நல்வாய்ப்பில்தான் சென்னையின் புதுயுக அடையாளங்களாக விளங்கும் மேம்பாலங்கள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி வசதிகள் கொண்டு வரப்பட்டன. சென்னையின் முகமும் முகவரியும் புதுமையான வலிவும் பொலிவும் பெற்றன. வரலாற்றின் அந்தப் பொன்னேடுகளை நினைவுகூர்ந்து, சென்னை தினத்தைக் கடைப்பிடிப்போம். “மெட்ராஸ் டே “ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான். அதன் பின்னணியில் மிளிரும் தலைவர் கலைஞரின் நினைவுகளை என்றும் போற்றி மகிழ்வோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.