Skip to main content

இடைத்தேர்தல்; விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி அலசல்...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி விளாத்திகுளம். எட்டயபுரம் ,விளாத்திகுளம் என இரண்டு தாலுகாக்கள், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கயத்தார் என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுதி. வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடி தொழில், உப்பள தொழில். இன்னொருபுறம் வானம் பார்த்த கரிசல் பூமி, மானாவாரி விவசாயம், நெசவு தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத்தன்மையுடன் தொகுதி விரிந்து கிடக்கிறது.

 

vilathikulam

 

இதுவரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 8 முறை அதிமுக வென்றுள்ளது. திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டைகளில் ஒன்று விளாத்திகுளம் தொகுதி. 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் விளாத்திகுளம் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் வர இருப்பதால் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வர உள்ளார்கள் தொகுதியும், தொகுதி மக்களும்.

 

jayakumar

 

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், திமுகவைப் பொறுத்தவரை ஜெயக்குமார் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். அதிமுகவினர் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொகுதி மக்களோடு தொடர்பிலும் இருக்க, திமுகவினர் இங்கு விருந்தினராக இருப்பதால் மக்களுக்கும் அவர்களுக்குமான் இடைவெளி அதிகமாக இருக்கின்றது. விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட குளத்தூர், வேம்பார், சூரன்குடி, வைப்பாறு உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையோர கிராமப்பகுதிகள் அனைத்தும் திமுக வாக்கு வங்கி உள்ள பகுதிகள். நாகலாபுரம், புதூர், விளாத்திகுளம் நகரம் ஆகிய பகுதிகள் அதிமுக வாக்கு வங்கி உள்ள பகுதிகள். எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமமுக வாக்கு வங்கி உள்ள பகுதியாக உள்ளது.

 

chinnapan

 

வெங்காயம், மிளாகய் வத்தல், மல்லி மற்றும் சிறுதானிய பயிர்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும். கீழ வைப்பாறு, சிப்பிகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு அழிவில் விளிம்பில் உள்ளது. அப்பகுதிகளில் கடல் தொழில் செய்வதற்கு ஏதுவான கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை பணி அமர்த்த வேண்டும். கிராமங்களுக்கு மினி பஸ் சேவை வழங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியால் தொகுதிக்கு எந்த நன்மையும் இல்லை. எந்த கெடுதலும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு வந்ததும், சென்றதும் அவரை பொறுத்த வரை ஒரு சுக்கிர திசை. மக்களுக்கு சிரம திசை.

 

வரும் தேர்தலால் மக்களின் சிரம திசை மாறவேண்டுமென்பது தொகுதி மக்களின் கனவு, நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.