
அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு எட்டு மணி நேரப் பணி நேரம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, 8 மணி நேரப் பணி நேரம் நிர்ணயித்து, 2015ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி, மருத்துவர் ரவீந்திரநாத் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பணிச்சுமை காரணமாக மதுரை மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக வழக்கு நிலுவையில் உள்ளதால், மருத்துவக் கல்லூரி இயக்குனர் புதிய அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.