![Case against BJP people who struggle in madurai judge](http://image.nakkheeran.in/cdn/farfuture/excEDgsu7vFEEwvoeIM-jnet-z_NbS6_gtOTcFPhHCY/1687070312/sites/default/files/inline-images/th_4351.jpg)
தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக எஸ்.ஜி. சூர்யா இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார், டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்றம் விடுமுறை என்பதால், மதுரைக்கு அழைத்துவரப்பட்ட எஸ்.ஜி. சூர்யாவை காவல்துறையினர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நீதிபதி ராம்சங்கரன், எஸ்.ஜி.சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
எஸ்.ஜி.சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி ராம்சங்கரன் வீட்டின் முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் திரண்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு காவல்துறையினரால் அவர்கள் கலைக்கப்பட்டனர். இந்நிலையில், மகாசுசீந்திரன் உட்பட நீதிபதியின் வீட்டின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 43 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.