
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டண அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாணவிகள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியமா? எனச் சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மருத்துவ ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அப்படி, தலா 2 மருத்துவ இடங்களை அதிகரித்தால், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம்பெற்று கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும், 51 பேருக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில், கலந்தாய்வு முடிவில், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும். இதனால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதோடு, மாணவர்களுக்கு புதிய உத்வேகமும் கிடைக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான இந்தச் சமூகத்தின் பார்வையை மாற்ற, இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்து, இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் டிசம்பர் 17-ஆம் தேதி, பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.