மதுராந்தகம் அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட பெண்ணிடம் கூகுள் பே மூலம் இரண்டு காவலர்கள் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நிலையில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஜல்லிமேடு என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி மாலாவும் கணவர் போல் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாசு மற்றும் தலைமைக் காவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மாலாவிடம் கூகுள் பே-ல் 4,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.