வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் என்கிற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 500க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் சீனுவாசன்.
பள்ளியின் தலைமையாசிரியர் தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக இருப்பார். தலைவராக பிள்ளைகளின் பெற்றோர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக ஓம்பிரகாஷ் என்பவர் உள்ளார். கடந்த வாரத்தில் ஓம்பிரகாஷ், கல்வித்துறைக்கு அனுப்பிய புகாரில், வகுப்பறைக்கு பெஞ்ச் செய்கிறேன் என்று பிடிஏ சங்க பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டு போலியாக பில் தயாரித்துள்ளார். இதுப்பற்றி கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல மறுக்கிறார். பள்ளி மாணவ – மாணவிகளிடம் காரணமே கூறாமல் பணம் வசூலிக்கிறார், டிசி வழங்கவும் பணத்தை வாங்கினார் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை விசாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், ஆகஸ்ட் 1ந்தேதி பள்ளிக்கு நேரடியாக சென்றுள்ளார். அங்குள்ள சக ஆசிரியர்கள், தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்தே 3 நாட்கள் ஆகிறது என பதிலளித்துள்ளனர். இதில் அதிர்ச்சியானவர். தலைமையாசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்றால் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமே, ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
பின்னர் தலைமை ஆசிரியர் சீனிவாசன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்ததால் அவரை முதல்கட்டமாக சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மாணவர்களிடம் லஞ்சம்! - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
சார்ந்த செய்திகள்
Next Story
வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.
தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.
அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார்.
இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
எஸ்.டி, எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு... லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் பத்து விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.