Skip to main content

பெண் வழக்கறிஞர் புகார் எதிரொலி; வி.சி.க. விக்ரமன் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Bigg Boss Vikraman booked in 10 sections for lawyer complaint

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், 'பிக் பாஸ்' எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவருமான விக்ரமன் என்பவர் மீது இளம்பெண் ஒருவர் அளித்திருந்த புகாரின் பேரில் விக்ரமன் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சில மாதங்களாகவே விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். குற்றச்சாட்டு தெரிவித்துள்ள இளம்பெண்ணுடன் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் இதற்கு விக்ரமன் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணை தமக்குத் தெரியாது என்று மறுக்காத போதும் அவருடன் தனக்கு நட்பு இருந்ததாக விக்ரமன் விளக்கம் கொடுத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் உள்ள துணை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதில், 'நான் லண்டனில் தங்கிப் படித்து வந்தபொழுது வி.சி.க துணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன் அறிமுகமானார். அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். 13 ஆண்டுகளாக நாங்கள் பழகி வந்த நிலையில், இந்த வருடத்தின் ஜனவரி மாதம் லண்டனிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வந்த பொழுதும் கூட சென்னையில் கே.கே. நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தோம். 

 

காதலிப்பதாகக் கூறி என்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதோடு என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளார். நான் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டபோது தகராறு ஏற்பட்டது. பிறகு என்னுடனான நட்பை விட்டு விலகினார். அவர் என்னிடம் பல தவணை முறைகளில் வாங்கிய ரூ.13.7 லட்சத்தில் ரூ.12 லட்சம் திரும்ப கொடுத்துள்ளார். ஆனால், மீதமுள்ள ரூ.1.7 லட்சம் தரவில்லை. அதை அவரிடம் கேட்டபோது மிகவும் ஆபாசமாகவும், சாதி பெயரைக் குறிப்பிட்டு பேசி உதாசீனப்படுத்தினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். 

 

இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த இளம்பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம்பெண் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விக்ரமன் மீது மோசடி வழக்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்