![Bhavani Dam fills up for the 20th time!](http://image.nakkheeran.in/cdn/farfuture/xh7GgdH3DqsE5StNy5Xd8HAv1-fUGVaV3CgTyHKzmMk/1630323352/sites/default/files/inline-images/Z32_0.jpg)
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி என்றாலும் 102 அடிக்குமேல் நீரை தேக்கி வைக்க முடியாது என்ற பொதுப்பணித்துறையின் விதி இருப்பதால் அணைக்கு வரும் நீர் தற்பொழுது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது பவானிசாகர் அணை கட்டப்பட்டதிலிருந்து இன்று 20 ஆவது முறையாக 102 அடியை எட்டி நிரம்பியுள்ளது.
பவானிசாகர் அணைக்கு வரும் 2,633 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதில் 500 கனஅடி நீர் பாசனத்திற்கும் மீதம் உள்ள நீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை பார்ப்பதற்கே கடல்போல காட்சியளிக்கிறது. மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக பவானி ஆற்றின் கரையோட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது ஆடு மாடுகளை மேய்க்கவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.