
கோவையை அடுத்த அன்னூர் அருகே உள்ள பசூரில் கேரளாவை சேர்ந்த மொய்தீன் குட்டி உட்பட 3 பேரால் ஒரு பேக்கரி நடத்தப்பட்டுவருகிறது. இந்த பேக்கரியில் வேலைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன், 21 வயது இளம்பெண் வந்துள்ளார். கரோனா காரணமாக பேக்கரி மூடப்பட்டதால், அந்த பெண்ணின் கணவர் அருகே மில் ஒன்றில் பணிக்கு சென்றுள்ளார்.
மேலும், பேக்கரி உரிமையாளர் கேரளாவில் உள்ள தனது தோட்டத்தில் வேலை தருவதாக கூறி கணவன், மனைவி இருவரையும் பேக்கரி அருகே உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில், கணவர் வேலைக்கு சென்றதை பயன்படுத்தி, பேக்கரி உரிமையாளர்களான மொய்தீன் குட்டி(40), சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சொன்னால் கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து, மற்றொரு முறையும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், அப்பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இளம்பெண் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால் சந்தேகமடைந்த கணவர் விசாரித்துள்ளார். அப்போது அப்பெண், 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், பேக்கரி உரிமையாளர்களான பாலக்காட்டை சேர்ந்த சமீர் (28) மற்றும் சிகாபுதீன் (29) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.