Skip to main content

சாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்- அசுரன் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு!  

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'அசுரன்' திரைப்படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

அசுரன் திரைப்படத்தைக் கண்டேன். பிரமிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மாபெரும் அனுபவத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூற வேண்டும். என் தம்பி இயக்கிய இத்திரைப்படத்தை மனநிறைவோடு நான் கண்டபோது, ‘நீ என் தம்பி’ என்பதில் பெருமிதமும், பெருந்திமிரும் அடைந்தேன்.படத்தின் தொடக்கத்தில் ஒரு நீரோடையில் கால் எடுத்து வைக்கிற சிவசாமியின் கால்களைக் காட்டுகிற அந்த முதல் காட்சியில் இருந்து, ஒரு நிறைவானப் புன்னகையோடு தன் மனைவியையும், மகனையும் பார்த்தவாறே சிவசாமி பிரிகிற அந்த இறுதிக்காட்சி வரை விழி அகலாமல் பார்வையாளர்களைப் பார்க்க வைக்கிற உனது நேர்த்தியான இயக்கமாகட்டும்! ஒளிப்பதிவின் நுட்பமான கோணங்களாகட்டும்! உன் அண்ணன் வியந்துபோய்விட்டேன்.

 

 Seaman applauds for asuran movie!


குறிப்பாக, இத்திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷின் ஆற்றல்மிக்கப் பங்களிப்பு இத்திரைப்படத்தை யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டது என்றால், அது மிகையல்ல! இந்த இளம் வயதிலேயே மிகுந்தத் திறமை வாய்ந்த ஆளுமையாக தம்பி தனுஷ் திரைத்துறையில் வளர்ந்துக் கொண்டிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன். பல நடிகர்கள் தனக்குக் கொடுத்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், தனுஷ் அதற்குப் பன்மடங்கு மேலே சென்று சிவசாமியாகவே உருமாற்றம் அடைந்து வாழ்ந்திருக்கிறார்.

வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனைகள், முகத்தில் காட்டக்கூடிய சிறுசிறு உடன் உணர்ச்சிகள் என்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இத்திரைப்படத்தில் மகத்தானதொரு கலைச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். எந்தக் கதாநாயகனும் நடிக்கத் தயங்கும் அந்த வயதானக் கதாபாத்திரத்தை ஏற்று அதனுள் முழுமையாகப் பொருந்தி, சிவசாமியாகவே கண்ணில் நிற்கிறார் தம்பி தனுஷ். அந்த அடர்த்தியான மீசைக்குள் அந்த கறைப்படிந்தப் பல்லை பொருத்திக்கொண்டு, கோபமானத் தருணங்களில் மீசையை நீவியவாறே கண்விழிப் பிதுங்க ஆவேசமாக அவர் பாய்கின்ற காட்சிகளில், பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.அமைதியாகக் காட்சியளிக்கும் தனுஷ் வலி தாங்க முடியாமல் பொங்கியெழுந்து திருப்பி அடிக்க வருகிறபோது அரங்கமே அதிர்கிறது. 

 

 Seaman applauds for asuran movie!

 

பன்னெடுங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் பொறுத்துக்கொண்ட ஒரு சமூகம், ‘திருப்பி அடிக்க யாராவது வரமாட்டார்களா?’ என்று கண்ணீரோடும், ஏக்கத்தோடும் காத்திருக்கும்போது திருப்பி அடிக்க ஆவேசமாகச் சிவசாமி திரையில் வருகிறபோது வலி நிறைந்த நம் ஆழ்மனது விடை தேடிக்கொள்வது போல அந்தக் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. நம் சமகாலத்தில் வாழ்கின்ற மகத்தானக் கலைஞனாக இத்திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்திருக்கிற தம்பி தனுஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்! நடுநடுவே அவர் நடிக்கிற வணிக ரீதியிலானத் திரைப்படங்களை குறைத்துக்கொண்டு ‘அசுரன்’ போன்று காலம் கடந்து நிற்கக்கூடிய உன்னதத் திரைப்படங்களை தேர்வுசெய்து நடித்து பெரும் புகழடைய வேண்டுமென எனது விருப்பத்தையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

இதுபோன்ற பல உச்சங்களை அவனது வாழ்வில் அடைய வேண்டுமென உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.பாடல் வரிகளை உயிர் ஆழத்தோடு எழுதிய என் தம்பிகள் யுகபாரதி, ஏகாதேசி, அருண்ராஜா காமராஜ், ஏக்லாத் ஆகியோர் மிகச்சிறப்பான தமிழை வழங்கித் திரைப்படத்தை முழுத்தகுதிபடுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘எள்ளு வயல் பூக்கலையே’ என்ற பாடலின் வரிகளை சிறப்பாக எழுதிய என் தம்பி யுகபாரதி ஒரு பாடலில் ஒரு வாழ்க்கையையே வடித்துக் காண்பித்து விட்டான். அதைத் தம்பி தனுஷ் தன் குரலில் பாடியது மனதை நெகிழச்செய்கிறது.என் தம்பி வெற்றிமாறனின் கண்களாகவே மாறி ஒளிப்பதிவு செய்திருக்கும் வேல்ராஜின் பங்களிப்பு இத்திரைக்காவியத்தில் அளப்பெரியது.

 

 Seaman applauds for asuran movie!

 

இவ்வாறு ஆகச்சிறந்ததொருப் படைப்பை உருவாக்குவதில் அவரவர் தங்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டி மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.அநீதிகளுக்கு எதிரான சீற்றத்தை இத்திரைப்படத்தின் உரையாடல்கள் எங்கும் காணலாம். காலில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்று சொல்கிற சாதிய இறுக்கத்தை அதே செருப்பைக் கொண்டு அடித்து, சாதிய ஆதிக்கத்திமிரை வீழ்த்தும் காட்சியில் திரையரங்கே அதிர்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டத் தமிழ்ச்சமூகத்தின் எழுச்சி அந்த செருப்படியின் சத்தத்தில் தெறிக்கிறது; ஆண்டாண்டு காலமாக அடக்கியாண்ட சாதியத்தைச் சிதறடித்து முடிக்கிறது. இளம்பெண்ணின் தலையில் செருப்பை வைத்து சாதியவாதிகள் நடக்கச் சொல்கிற காட்சி, அளப்பெரும் ஆத்திரத்தையும், கடும் கோபத்தையும் நம்முள் ஏற்படுத்தி பார்ப்போர் எவரிடமும் சாதியத்தின் கொடுமையை எளிதாகக் கடத்துகிறது. பெண்கள் மாராப்பு சேலை அணியக்கூடாது; ஆண்கள் முட்டிக்குக் கீழே வேட்டியைக் கட்டக்கூடாது; எச்சிலைத் தரையில் துப்பக்கூடாது; செருப்பு அணியக்கூடாது என்று பன்னெடுங்காலமாக நிலவி வந்த சாதியத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய நமது முன்னோர்களைத் திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிற அக்காலப் போராட்டங்களின் ஒரு குறியீடாகவே இப்படத்தைப் பார்க்கிறேன். 

 

 Seaman applauds for asuran movie!

 

சிவசாமி சாதிய ஆதிக்கவாதியை உதைக்கின்ற உதை என்பது நீண்ட நெடுங்காலமாக நம்மை வீழ்த்திப் போட்டிருக்கிற சாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்.பஞ்சமி நில மீட்புப் பற்றி இத்திரைப்படம் விரிவாகப் பேசுகிறது. அதுகுறித்த விவாதத்தை வெகுமக்கள் மத்தியில் தொடங்கி வைக்கிறது. ஆதித்தமிழ் குடிகளும் மற்றவர்களைப் போல சரிசமமாக எல்லாவித உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள்கூட நிலங்களை ஒதுக்கி நமது மக்களின் நிலையை மாற்ற எண்ணினார்கள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என சமூகத்தின் ஆழ்தளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகவும் தன் வாழ்நாளெல்லாம் போராடினார். தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். பஞ்சமி நில மீட்பிற்காகக் குரல்கொடுத்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் வழியில் நின்று எங்கள் ஐயா நடராஜன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அண்ணன் வினோத் போன்றவர்கள் பல ஆண்டுகளாகப் பஞ்சமி நில மீட்பிற்காக போராடி வருகிறார்கள். 

 

 Seaman applauds for asuran movie!

 

ஆனாலும், இந்த ஆட்சியாளர்கள் அதுகுறித்து எதுவும் பேசுவதில்லை. ஏனெனில், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதே இவர்கள்தான். இதையெல்லாம் கண்டுக் கொதிப்படைந்த ஒரு கூட்டம் அதிகாரத்தை நோக்கி வேகவேகமாக விரைந்து வருகிறது. இந்த ஆட்சியும், அதிகாரமும் சாதி மதம் கடந்து தமிழனாக ஒன்று சேர்ந்து இருக்கிற இளைய தலைமுறைப் புரட்சியாளர்களிடம் சிக்கும்போது அதிகாரத்தை காட்டி மிரட்டி, பிடுங்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டப் பஞ்சமி நிலங்கள் யாவும் மீட்கப்பட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த உறுதியைத்தான் இத்திரைப்படம் நமக்குள் ஏற்படுத்துகிறது.படம் ஒவ்வொருக் காலக்கட்டத்திலும் ஒரு அரசியலைப் பேசுகிறது. குடிசையை எரிக்கும் கீழ்வெண்மணி காலக்கட்டத்தில் அநீதிக்கு எதிராகப் போராடுகிற சிவப்புத் துண்டாகட்டும்! எண்பதுகளில் காலில் விழுகிற சிவசாமியைக் கைப்பிடித்து தூக்குகிற கருப்புச்சட்டை ஆகட்டும்! இறுதிக்காட்சியில், சிவசாமி பேசுகிற தமிழின ஓர்மையை விதைக்கிற தமிழ்த்தேசியக் கேள்வியாகட்டும். அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல் சிந்தனைக் குறியீட்டு அம்சங்களால் மாபெரும் சமூகப் புரட்சியின் சாட்சியமாக அசுரன் உருவாகி இருக்கிறான்.“காடு இருந்தா புடிங்கிக்கிடுவானுவோ! ரூபா இருந்தா எடுத்துக்கிடுவானுவோ! படிப்பை மட்டும் எடுத்துக்க முடியாது சிதம்பரம்! படிச்சு நீ பெரியாளா வரும்போது அவனுவோ நமக்கு செஞ்சத நீ யாருக்கும் செஞ்சிராத” என்று நிறைவுறும் அந்த இறுதிக்காட்சியின் மூலம் தமிழ்த்தேசிய இன மரபிலேயே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிற அற உணர்ச்சியைத் தம்பி வெற்றிமாறன் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்து இருக்கிறான். "ஒரே நிலத்தில் வாழ்றோம். ஒரே மொழியைப் பேசுறோம். 

இது ஒன்னு போதாதா நாம ஒன்னா சேர?" எனும் கேள்வியின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் ஓர்மைக்கு விடை சொல்லும் அந்த உரையாடல் இன்றையக் காலக்கட்டத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிற அரசியலை எவ்விதச் சமரசமுமின்றி இப்படம் பேசுகிறது.இத்திரைப்படம் உருவாவதற்கு முன்னாலேயே இக்கதையை என்னிடம் நீ கூறியபோது, நான் அடைந்த பிரமிப்பைவிடத் திரைப்படம் பன்மடங்கு வியப்பையும், திகைப்பையும் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கானக் கூட்டங்களில் பல மணி நேரம் வியர்வை சிந்தி நான் விதைக்கிறக் கருத்துக்களை ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக நீ நாடெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறாய் என்பதை இத்திரைப்படத்தின் வாயிலாக அறிந்து பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் தம்பி!இப்படிப்பட்டச் சமூக நோக்கம் கொண்டத் திரைப்படத்தைத் துணிச்சலோடு தயாரித்து அதை முறையாக வெளியிட்டு, கடைக்கோடித் தமிழன்வரை கொண்டு சேர்த்திருக்கிற என் ஆருயிர் அண்ணன் கலைப்புலி தாணு அவர்களை ஒரு தமிழ்மகன் என்ற முறையில் தலைவணங்கி அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன்! இத்திரைப்படம் மூலம் அண்ணன் தாணு அவர்களைக் கலைப்புலி என்றழைப்பது எத்தகைய சாலப்பொருத்தமானது என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தைப் படைக்க தம்பி வெற்றிமாறனுக்கும், தம்பி தனுஷ்க்கும் வாய்ப்பளித்த அண்ணன் தாணு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!அண்ணன் கலைப்புலி தாணு அவர்களின் நிறுவனத்தைச் சேர்ந்த உறவுகளுக்கும், இத்திரைப்படத்தில் என் தம்பி வெற்றிமாறனோடு இணை இயக்குனராக பணியாற்றிய எனது உயிர் இளவல் ஜெகதீச பாண்டியனுக்கும், அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது புரட்சி வாழ்த்துக்கள்!உனக்குத் தனிப்பட்ட அளவில் எனது பெருமித உச்சிமுகர்தல்கள் என் தம்பி. வெறும் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள் என்ற சொற்களின் மூலமாகப் போற்றிப் புகழ்ந்து இத்திரைப்படத்தின் புகழை சுருக்க விரும்பவில்லை.இது அதற்கும் மேலே தமிழ்ச்சமூகம் எக்காலத்திற்கும் கொண்டாட வேண்டிய மாபெரும் திரைக்காவியம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.