
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இவர், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றது தொடர்பான வழக்கு; சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றவர் ஆவார். இவரது பதவிக் காலம் வரும் மே மாதம் 13ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாயை , தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சில தினங்களுக்கு முன்பு முறைப்படி முன்மொழிந்துள்ளார். இந்த நியமன நடைமுறையின் ஒரு பகுதியாக இது தொடர்பான பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பி.ஆர்.கவாய் மே 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். அவருக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.