
2025 ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறப்போகுக் பட்டியலை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதில், 6 பேருக்குப் பத்மவிபூஷன் விருதுகளும், 19 பேருக்குப் பத்மபூஷன் விருதுகளும், 113 பேருக்குப் பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலைத்துறையில் நடிகர் அஜித்குமாருக்குப் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (28.04.2025) நடைபெற்றது. இந்த விருது பெறுவதற்காகத் தனது குடும்பத்தினருடன் நேற்று விமானம் மூலம் அஜித் டெல்லி சென்றடைந்தார். இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பத்ம விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அதன்படி அஜித்குமார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித்குமார் பெற்றதற்கு, அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பத்ம பூஷண் விருது பெற்று திரும்பிய அஜித்குமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அனைவருக்கும் நன்றி, நேரில் சந்தித்து விரிவாகப் பேசுவோம். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். நன்றி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.