
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று (09.03.2021) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது இன்று தெரியவரும் எனக் கூறப்பட்ட நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அமமுக உடன் திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், மறுபுறம் தனித்து நிற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பழனியப்பன், மாணிக்க ராஜா ஆகியோருடன் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, இளங்கோவன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட முரசு சின்னத்தை தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதனால் தேமுதிகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.