Skip to main content

இந்தச் சதியில் தமிழகம் பலியாகிவிடக்கூடாது - வேல்முருகன்

Published on 25/03/2018 | Edited on 26/03/2018
vel

 

"நான்கு மாநிலங்களுக்கான காவிரியில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்குமான பாத்யதையை கர்நாடகத்துடன் இழைந்து கத்தரித்துவிடும் திட்டத்திலான மோடியின் உருவாக்கமே அண்மைக் காவிரித் தீர்ப்பு!  இந்த சதியில் தமிழகம் பலியாகிவிடாமல் எதிர்வினையாற்ற உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  சுதந்திர இந்தியாவில் வி.பி.சிங் அரசைத் தவிர மற்றெல்லா அரசுகளும் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக தமிழகத்துக்கு துரோகம் செய்தன, செய்கின்றன.

வி.பி.சிங்தான் நியாயமாக நடந்து 1990ல் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார்.  அந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு 1991ல் வெளியானது. அதன்படி, 205 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும்; தன் பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகா உயர்த்தக் கூடாது.

ஆனால் தீர்ப்பின்படி நடந்துகொண்டதா கர்நாடகா?  மாறாக, கலவரத்தை உருவாக்கி 12 தமிழர்களை படுகொலை செய்தது; லட்சம் தமிழர்களைத் துரத்தியடித்தது.

தமிழகத்துக்குத் தண்ணீர் விடாமல் தன் பாசனப் பரப்பை பல ஆயிரம் ஏக்கர் அதிகப்படுத்திக்கொண்டது.

2007ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அதில் தமிழகத்திற்கு  192 டிஎம்சி நீர் என்று 13 டிஎம்சி நீர் குறைந்தது.   இதைப் பங்கிட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் ஒழுங்காற்றுக் குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்.  ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்தான் தீர்ப்பை அரசிதழிலேயே வெளியிட்டது காங்கிரசின் மன்மோகன் சிங் அரசு. அதன் பதவிக்காலமும் ஒருசில நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.  அதன்பின் வந்த மோடி அரசு திட்டமிட்டே மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை; கர்நாடகத்தை தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவும் சொல்லவில்லை. கர்நாடகமும் தண்ணீர் திறந்துவிடவில்லை.

இந்நிலையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் தங்கள் குறைகளை முறையிட்ட மீளாய்வு வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 16ந் தேதி வெளியானது.

அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீர் என்று இன்னும் 14.75 டிஎம்சி குறைந்தது.  இத்தனைக்கும் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பரப்பு 44,000 சதுர கிலோமீட்டர். கர்நாடகாவிலோ 34,000 சதுர கிலோமீட்டர்தான்.

தமிழகத்துக்கு 14.75 டிஎம்சியைக் குறைத்து அதனை கர்நாடகாவில் குடிநீருக்கும் தொழிற்சாலைகளுக்கும் என்று ஒதுக்கியது உச்ச நீதிமன்றம்.
மற்ற மாநிலங்களுக்கான குடிநீர், தொழிற்சாலைகளுக்கான நீர் பற்றியெல்லம் உச்ச நீதிமன்றத்திற்குக் கவலையில்லை.

தமிழகத்தின் நீர் அளவைக் குறைத்ததற்கு இங்கு நிலத்தடி நீர் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறதென்றும் காரணம் காட்டியது உச்ச நீதிமன்றம்.
இதெல்லாம் தீர்ப்பில் உள்ள சட்டமீறல்கள்.                    

அதேநேரம் தீர்ப்பில் உள்ள ”பூடகமான” சொற்கள் மற்றும் ”காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது; காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் இத்துடன் முடிவுக்கு வருகின்றன; 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு கிடையாது” என்கிற வரிகள், தீர்ப்பை டெல்லி தன் விருப்பப்படி கையாள வகை செய்கின்றன.

ஆகவேதான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தையும் நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் இந்த மீளாய்வுத் தீர்ப்பு அமைக்கச் சொல்லவில்லை என்கிறது மோடி அரசு.

அதற்குப் பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும்; அதன் தலைவர் உள்பட நிரந்தர உறுப்பினர்கள் 5 பேரை ஒன்றிய அரசு நியமிக்கும்; தற்காலிக உறுப்பினர்கள் 4 பேர் 4 மாநிலங்களிலிருந்து நியமிக்கப்படுவர் என்கிறது.

இப்போது புரிகிறதல்லவா? அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக மத்தியில் ஒற்றையாட்சியின் கீழ் மாநிலங்களை மட்டுமல்ல மாநிலங்களுக்கிடையேயான நதிகளையும் கொண்டுவருவதுதான் மோடியின் திட்டம்; அதன்படியே காவிரித் தீர்ப்பு உருவாக்கம்!

மோடி இப்படிச் செய்வதற்கு தமிழ்நாட்டை அவர் குறி வைப்பதுதான் காரணம்.  அதனால்தான் அணுவுலை, நியூட்ரினோ, சாகர்மாலா, விவசாய நிலங்களில் கெயில், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, பெட்ரோலிய மண்டலம் என பேரழிவுத் திட்டங்களோடு, காவிரி நீரைத் தடுத்து தமிழகத்தைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டம்.

அந்த அடிப்படையில், நான்கு மாநிலங்களுக்கான காவிரியில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்குமான பாத்யதையை கர்நாடகத்துடன் இழைந்து கத்தரித்துவிடும் திட்டத்திலான மோடியின் உருவாக்கமே அண்மைக் காவிரித் தீர்ப்பு!

இதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்; இந்த சதியில் தமிழகம் பலியாகிவிடாமல் எதிர்வினையாற்ற உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.