Skip to main content

வள்ளலார் தைப்பூச திருவிழா... ஜோதி காண குவியும் பக்தர்கள்...!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

தைப்பூச திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 149-வது  ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

 

Thaipusam and jothi darisanam

 



ஆன்ம நேய வழிபாட்டில் புதிய அர்த்தத்தை கொடுத்தவர்  வள்ளலார்.  கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள மருதூர் கிராமத்தில் வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்தார். இராமையா பிள்ளைக்கும், சின்னம்மைக்கும் அருந்தவ புதல்வராக வள்ளலார், 5-10-1823- ல் சுபானு ஆண்டு புரட்டாசி மாதம், 21 ஞாயிறு மாலை 5.54 மணி அளவில் பிறந்தார். வள்ளற்பெருமான் பிறந்த ஆறாம் மாதமே தந்தையை இழந்தார். அதன் காரணமாக சென்னைக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. தன் அண்ணன் இராமையா பிள்ளை அவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கிய வள்ளலார் கல்வியில் நாட்டமின்றி இறைவழிப்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் சொற்பொழிவுகளின் மூலம், ஆன்மீக பயணங்களை தொடங்கினார் வள்ளலார். இல்லறத்தில் நாட்டமின்றி உள்ளம் கடவுளை நாடியது, சாதி, மத கடவுள்களை வழங்குவதை விடுத்து கடவுளை ஜோதி வடிவமாக வணங்கினார்.

சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்து வடலூர் அருகே உள்ள கருங்குழியில் தங்கி மக்களுக்கு ஆன்மீகம், சித்தமருத்துவம் உள்ளிட்ட வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தார். கருங்குழியில் தங்கி இருந்த போது எண்ணை என நினைத்து, தண்ணீரை ஊற்றி விளக்கெறிய செய்த அதிசயமும் நிகழ்ந்தது. அவரது போதனைகளான ஐந்து திருமுறைகளும் உருப்பெற்றது இங்குதான்.மேலும் கருங்குழிக்கு அடுத்த மேட்டுகுப்பத்தில் காலை வேளையில் பல் துலக்கி கொண்டு சென்ற போது தண்ணீர் இல்லாததால் தன் கையில் இருந்த பல் துலக்கும் குச்சியின் மூலம், ட வடிவில் கோடு கிழிக்கவே அங்கு நீர் ஊற்று வர துவங்கியது. அந்த நீர் ஊற்று தற்போதும் இங்கு காணபடுவது அதிசயமே!

 



சன்மார்க்கம் என்ற கொள்கைகளான, ஜீவகாருண்யம், உயிர் கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற கொள்கைகளை மக்களிடையே பரப்ப 2-2-1867 ஆம் ஆண்டு சமரச சுத்த  சன்மார்க்க சங்கத்தை வடலூரில் துவங்கி சன்மார்க்க நெறியை பரப்பினார். பசியை பிணியாக கருதிய வள்ளலார் பசியுடன் வருவோருக்கு உணவு அளித்திட 23-5-1867 பிரபவ வருடம், வைகாசி மாதம் 11 ஆம் தேதி சத்திய தர்மசாலையை நிறுவி, அன்னதானம் வழங்க அணையா அடுப்பை ஏற்றினார். இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார், அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் 1872- ல் சத்திய ஞான சபையை நிறுவினார்.

உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும் சாதி, மதம், இனம், மொழி, தேசம் முதலிய எந்தவித வேறுபாடுகளும், இல்லாத நிலையில், அனைவரும் பிராத்தனை செய்யும் முறையில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் அமைத்தார். சத்திய ஞானசபையில் தினசரி காலை 6-00 மணி முதல் இரவு 8 மணி வரை திருவருட்பா பாடல்களை பாடி அன்பர்கள் பிராத்தனை செய்கின்றனர்.பகல் 11-30 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7-30 மணி முதல் 8 மணி வரையிலும் பூசை நடைபெற்று வருகிறது.

 



மாதம் தோறும், மாத பூசம் நடைபெறுவது வழக்கம், அதன்படி இரவு 8 மணி முதல் 8-30 மணி வரை ஆறு திரைகள் நீக்கி மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பிரதி தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி ஆறு காலம் ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச ஜோதி தரிசனம் காலை 6-00 மற்றும் 10 மணிக்கும், மதியம் 1-00 மணி மற்றும் இரவு 7-00, 10-00மணிக்கும், மறுநாள் காலை 5-30 மணிக்கும் ஆறு காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெறும்.

சத்திய ஞான சபையில் வழிபாடு செய்பவர்கள் புலை, கொலை,  தவிர்த்தவராக இருத்தல் வேண்டும் என்பது வள்ளற்பெருமான் வகுத்த விதியாகும். சித்திவளாக திருமாளிகையான மேட்டுகுப்பம், வடலூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேட்டுக்குப்பம் என்னும் கிராமம்.  அந்த கிராமத்தில் சித்திவளாகம் என்னும் இடத்தை நிறுவி வாழ்ந்த வள்ளற்பெருமான் தான் வாழ்ந்த அறையிலேயே 1874-ஆம் ஆண்டு இறைவனுடன் ஜோதியாக கலந்தார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு, எனவும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற உன்னதமான மாஹா மந்திரத்தை அருளி சென்றார் வள்ளற்பெருமான். இன்று தைப்பூச ஜோதி தரிசனத்தை காண நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூர் சத்திய ஞான சபைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.