![AIADMK executive who attacked his own party members; Police case](http://image.nakkheeran.in/cdn/farfuture/aAJKLEE19tdm8bN-N_HmkT8U_GU8akJthxv-rHq84oQ/1675053184/sites/default/files/inline-images/n223147.jpg)
விழுப்புரத்தில் சொந்த கட்சியினரையே தாக்கிய அதிமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அதிமுகவில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் பேட்டை முருகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவில் வேலை வாங்கித் தருவதாக அதிமுகவின் கிளைச் செயலாளர் உதயசூரியன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சொல்லியபடி வேலை வாங்கித் தராததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது மோதலாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பான மோதலில் பேட்டை முருகன் உருட்டுக் கட்டையால் உதயசூரியன் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கியுள்ளார். இதனால் காயம்பட்டவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக உதயசூரியன் போலீசில் புகாரளிக்க, வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி பேட்டை முருகனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.