Skip to main content

லாக்கப் டெத் ; ஆய்வாளர் உட்பட3 பேருக்கு சிறை தண்டனை - இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதி 

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
After 7 years of imprisonment, inspector was admitted to hospital

வேலூர் மாவட்டம்  குடியாத்ததை சேர்ந்தவர் ஆசிரியர் சுகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலையத்தில், கடந்த 01.10. 2013-ம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக குடியாத்தம் பகுதியை சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரர் கோபி (எ) கோபால் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை மேல்பட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,  மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்ளேயே கோபி (எ) கோபால் (லாக்கப் டெத்) உயிரிழந்தார்.

இந்த வழக்கு 2017-ம் ஆண்டு வேலூர் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் முரளிதரன், முதன்மை காவலர் உமா சந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா ஒரு லட்சத்தி 70 ஆயிரம் அபராதமும், ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ இன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முனைவர் முருகன் உத்தரவிட்டார்.

தற்போது ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளராகவும், தலைமை காவலர் உமாசந்திரன் பரதராமி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மூன்று பேரை சிறைக்கு அழைத்து செல்லும் போது, தலைமை காவலர் உமாசந்திரன், ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ இன்பரசன் ஆகிய இருவரை சிறிது நேர இடைவேளை விட்டு கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக காவல் துறையினர் அழைத்து சென்றனர். பின்னர் காவல் ஆய்வாளர் முரளிதரனை மற்றொரு வாயில் வழியாக அழைத்து சென்றனர். ஆனால் அங்கும் வண்டியில் ஏற்றாமல் வண்டியை மட்டும் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு காவல் ஆய்வாளர் வேறு ஒருவழியாக போய்  நீதிமன்ற வளாகத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். பின்னர் அவரிடத்திற்க்கு சென்று காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

இவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்து இருப்பதால் முறைப்படி இவர்களை சிறையில் அடைத்திருக்க வேண்டும், ஆனால் காவல்துறை அப்படி செய்யவில்லை. சிறைக்கு செல்லும் முன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் தற்போது பணியில் உள்ள இரண்டு காவல்துறை கீழ்நிலை அதிகாரிகளுக்கு உடல் நலக்குறைவு இருப்பதாக மருத்துவர்கள் வழியாக சான்றிதழ் பெற்றனர். அதாவது இருவருக்கும் நெஞ்சுவலி எனச்சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்படாமல் மருத்துவமனையில் இருந்து வருகின்றனர். இதில் தண்டனை பெற்ற மூன்றாவது நபரான பணியில் இருந்து ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இன்பரசன் மட்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சார்ந்த செய்திகள்