வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் கூலி வேலை செய்யும் ஜெயபிரகாஷ். இவருக்கு இரண்டு வயதில் தேவிஸ் என்கிற மகன் உள்ளான்.
இவர்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம், அதனால் எலியை கொல்ல எலி மருந்து பிஸ்கட் வாங்கி வந்து வீட்டில் அங்கங்கு வைப்பது வழக்கமாம். அதன்படி செப்டம்பர் 27ந்தேதி இரவு வீட்டில் எலியை கொல்ல பிஸ்கட் வைத்துள்ளனர்.

செப்டம்பர் 28ந்தேதி மதியம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது வீட்டில் எலி தொல்லைக்காக வைக்கப்பட்டிருந்த எலிமருந்து பிஸ்கட்டை எடுத்து குழந்தை தவறுதலாக சாப்பிட்டுள்ளது. சாப்பிட்ட குழந்தை சிறிது நேரத்தில் மயங்கிய பின்பே பெற்றோர் அதனை பார்த்துள்ளனர்.
அதிர்ச்சியாகி, அழுது புரண்ட ஜெயபிரகாஷ் தம்பதியினர் உடனடியாக குழந்தை தூக்கிக்கொண்டு வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் குழந்தை செப்டம்பர் 29ந்தேதி காலை இறந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் கவனக்குறைவு, இரண்டு வயது குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.