Skip to main content

“ஈ.டி.க்கும் பயப்பட மாட்டேன், மோடிக்கும் பயப்பட மாட்டேன்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Udhayanidhi stalin speech in kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பிறகு லா.கூடலூர் ஊராட்சி பகுதியில், கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; “திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி இப்படி ஏகப்பட்ட அணிகள் இருக்கின்றன. அதிமுகவில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தீபா அணி, சசிகலா அணி, தீபா டிரைவர் அணி எனப் பல்வேறு அணிகள் இருக்கிறது. நம்முடைய இயக்கங்களுக்கு எல்லாம் மாவட்டத்திற்கு ஒரு கட்சி அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவில் மட்டும்தான் மாவட்டத்திற்கு 3 கட்சி அலுவலகம் இருக்கு. எந்த ஆபிஸுக்கு போறதுனு யாருக்கும் தெரியாது. அதே போல் பாஜகவில் நிறைய அணிகள் இருக்கிறது. தேர்தல் வரும்போது அந்த அணிகள் எல்லாம் களம் இறங்கிவிடுவார்கள். அந்த அணிகளின் பெயர்களை எல்லாம் பார்த்தால் சிபிஐ அணி, ஈடி அணி, ஐ.டி அணி இந்த அணிகளை எல்லாம் களமிறக்கி விடுவார்கள். இப்பொழுது அவர்கள் களமிறக்கி விட்டார்கள்.

 

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அணிகள் இடி, சிபிஐ 95 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு மகாராஷ்டிராவில் பாஜக என்னென்ன கூத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக அதன் தலைவர்களில் ஒருவரான அஜித் பாவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

 

அவருக்கு மட்டுமல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. இவர்களெல்லாம் தற்போது பாஜகவின் பக்கம் வந்து விட்டார்கள். பாஜகவின் பக்கம் வந்த பிறகு இவர்கள் எல்லாம் புனிதர்களாக ஆகிவிட்டனர். இப்போது அவர்கள் வீட்டில் எந்த சோதனையும் கிடையாது.

 

121 அரசியல் தலைவர்களை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. அதில் 115 பேர் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள். டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் மனிஷ் சிசோடியா, மகாராஷ்டிரா சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேஷ்முக், மேற்கு வங்கத்தில் 19 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மகள் கவிதா ராவ், கர்நாடகாவில் டி.கே.சிவகுமார், உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆசிப் கான். 

 

இன்றைக்கு தமிழக ஆளுநர் அவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க அனுமதி மறுக்கிறார். பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், பி.வி.ரமணா இவர்களுக்கு தொடர்பான இடங்களில் எல்லாம் சென்ற முறை அமலாக்கத்துறை சோதனை செய்தது. விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து சுவர் எகிறி குதித்த காட்சி எல்லாம் நீங்கள் அறிவீர்கள். அப்படி மிரட்டி தான் அதிமுகவை அவர்களது அடிமையாய் ஒன்றிய பாஜக அரசு வைத்தது.

 

அதேபோல், திமுகவையும் தங்களது அடிமையாக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. பிரதமர் மோடி அவர்களே,  மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இங்கே தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர் செல்வமோ கிடையாது உங்களுக்கு அடிமையாக இருக்க; மாறாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி.

 

ஈடி, ஐடி, சிபிஐ மிரட்டி வச்சுக்கலாம் ஆனா உங்க பம்மாத்து வேலை எல்லாம் திமுகவில் நடக்காது. நேற்று கூட பாஜக தலைவர் ஒருவர் பேட்டி கொடுக்கிறார். விரைவில் உதயநிதி வீட்டில் ரெய்டு நடக்க போகுதுனு. வாங்க என் அட்ரஸ்  நான் கொடுக்கிறேன். உங்க ஈ.டி.க்கும் பயப்பட மாட்டேன். மோடிக்கும் பயப்பட மாட்டேன்” என்று பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்