Skip to main content

தட்டிக்கேட்கத் திராணியற்ற அதிமுக அரசு: ஆட்சியாளர்களால் தமிழகம் சூறையாடப்படும் அவலம்: த.வா.க. கண்டனம்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019


 

நாடாளுமன்றத் தேர்தல்-2019இல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்றது. 
 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது தீர்மானத்தில், மத்திய பாஜக அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அதில், ''நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும் சரி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசும் சரி; மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. இரு அரசுகளும் கைகோர்த்துக் கொண்டுள்ளன. சரியாகச் சொல்வதென்றால், மோடி அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஏவல் அரசாகவே உள்ளது பழனிசாமி அரசு. 

 

eps


 

தமிழகத்தை பாதிக்கும் நீட், ஹைட்ரோகார்பன் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், சேலம்-படப்பை 8 வழிச்சாலை, 8 வடக்கு-மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் ஊடாக உயர் அழுத்த மின் தடம் போன்றவற்றை தலையில் கட்டியது மோடி அரசு. ஆனால் அதனை நிராகரிக்கத் திராணி இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது பழனிசாமி அரசு.
 

தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கையெழுத்திடாதிருக்கிறார் ஆளுநர். இதையும் தட்டிக்கேட்கத் திராணியற்றிருக்கிறது அதிமுக அரசு. 
 

தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வை சுடுகாடாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 அப்பாவி பொதுமக்களை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக சுட்டுப் படுகொலை செய்த தமிழக அரசு. 
 

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அன்றாடம் தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். அதைக் கேட்கவும் துப்பில்லாமல் இருக்கிறது அதிமுக அரசு. இதனை மாநில சிறப்பு பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது''. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


 

tvk


இரண்டாவது தீர்மானத்தில், 'சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாமல், பதவியில் ஒட்டிக்கொண்டுள்ளது அதிமுக அரசு. அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமாக இப்படி இதனை ஒட்டவைத்திருக்கிறது மோடி அரசு. இதற்காக 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துதான் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்க வேண்டிய மேலும் 3 தொகுதிகள் உள்நோக்கத்துடன் கைவிடப்பட்டுள்ளன.
 

உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தாமல் மூன்று ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது அதிமுக அரசு. இதனால் மக்களுக்குப் பெரும் பாதிப்பு என்பதுடன் ஜனநாயகமே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சமும் ஊழலும் மிதமிஞ்சிப்போய் ஆட்சியாளர்களாலேயே தமிழகம் சூறையாடப்படும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கும் தன் கண்டனத்தைப் பதிவு செய்கிறது மாநில சிறப்பு பொதுக்குழு''. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.