Skip to main content

புதுச்சேரியில் சொல்வதால் கைதுசெய்ய சொல்லும் நாராயணசாமி, தமிழ்நாட்டில் சொல்லும் தி.மு.க கூட்டணியினரை கைதுசெய்ய சொல்வாரா... -ரங்கசாமி

Published on 03/04/2019 | Edited on 12/04/2019

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேங்காய்திட்டு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 

 

rangasamy


 

அப்போது அவர், "என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற செய்வதின் மூலம் பாராளுமன்ற நிதியை புதுச்சேரி மாநிலத்திற்கு சரியாக பயன்படுத்த முடியும். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் மாநிலத்திற்கு எதையும் சரியாக செய்யவில்லை. எந்த திட்டத்திற்கும் நிதியைக் கொண்டுவரவில்லை.  இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதால்தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இளைஞர்களால் தான் முழுமையாக பணியாற்ற முடியும். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஊக்குவிக்க வேண்டும். 
 

என். ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களைக்கூட ஆளும் காங்கிரசார் செயல்படுத்தவில்லை. ஏற்கனவே புதுச்சேரி சிறப்பாக உள்ளபோது இதில் பொலிவுரு திட்டத்தினை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என காங்கிரஸ் முதல்வர் கூறுகிறார். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தபோதே இத்திட்டத்திற்கான கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களை குறைகூறியே ஆளும் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. 
 

புதுச்சேரியில் ஆட்சி கவிழும் என்று கூறுபவர்களை சிறையில் தள்ள வேண்டுமென நாராயணசாமி கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஸ்டாலின், முத்தரசன் ஆகியோர் தமிழகத்தில் ஆட்சி கவிழும் என கூறிவருகிறார்கள். அவர்களை எல்லாம் கைதுசெய்ய வேண்டுமென காங்கிரசார் கூறுவார்களா? புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநரை எதிர்த்து கோமாளித்தனமான அரசியல்தான் நடைபெற்று வருகிறது" என்றார். 
 

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தின்போது, நான்கு முனை சந்திப்பில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்ததால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.