Skip to main content

வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
ramadoss

 

 

அறுவடை செய்யப்பட்ட நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் நேற்று தொடங்கி விட்ட நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து வரும் நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது நியாயமல்ல.

 

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டில் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் 4 லட்சம்  ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில்  சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை பருவ நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம். அந்த நாளில் இருந்து தான் புதிய கொள்முதல் விலை நடைமுறைக்கு வரும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.53 விலை உயர்த்தப்பட்டிருப்பதால் அதிக எண்ணிக்கையிலான உழவர்கள் நேற்று தங்களிடமுள்ள நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு சென்றனர். ஆனால், பெரும்பான்மையான நிலையங்கள் நடப்புப் பருவத்தின் முதல் நாளில் செயல்படாதது அவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. அதிக எண்ணிக்கையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களுக்கு வந்ததால், அவற்றை முழுமையாக கொள்முதல் செய்ய முடியாமல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் திணறி வந்தனர்.  புதிய கொள்முதல் பருவம் நேற்று தொடங்க இருந்ததையொட்டி, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியுடன்  கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. அதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 முதல் 2000 குவிண்டால்களுக்கும் கூடுதலான நெல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 6 லட்சம் குவிண்டால்களுக்கும் கூடுதலான நெல் தேங்கிக் கிடப்பதாக  உழவர்கள் தெரிவிக்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால்  சாலையில் கொட்டியும், மூட்டைகளாக அடுக்கியும் வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து சேதமடைந்துவிட்டது.

 

இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவே திட்டமிட்டபடி நேற்று நெல் கொள்முதல் தொடங்கியிருந்தால் கூட, தேங்கிக் கிடக்கும் நெல்லையும், புதிதாக வரும் நெல்லையும் கொள்முதல் செய்து முடிப்பதற்கே இன்னும் 10 நாட்களாவது ஆகும். மற்றொருபுறம் நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அதை கொள்முதல் செய்ய முடியும். மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருக்கும் என்பதால், அதை விற்பனை செய்ய முடியாது.  நனைந்த நெல்லை அதே பகுதியில் ஓரிரு நாட்கள் காய வைத்த பிறகுதான் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும். இத்தகைய சூழலில் நெல் கொள்முதல் நிலையங்கள் திட்டமிட்டபடி திறக்கப்படாததால் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ என்ற ஏக்கம் உழவர்களிடம் நிலவுகிறது. இடைப்பட்ட காலத்தில் மழை வந்து விட்டால் நெல் வீணாகி விடுமோ? என்ற கவலையும் வாட்டுகிறது.

 

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் நூற்றுக்கணக்கான  மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை கிடங்குகளுக்கு அனுப்பிய பிறகு தான் புதிதாக நெல் கொள்முதல் செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பணிகளை விரைந்து முடித்து அடுத்த சில நாட்களில் நெல் கொள்முதல் தொடங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் குறுவை சாகுபடி அதிகளவில் நடைபெற்றுள்ளது. விளைச்சலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் அறுவடை செய்யப்பட்ட நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதை கருத்தில்கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நிலைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.